துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்.. லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி..!


துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்.. லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி..!
x

விழுப்புரம் அருகே லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

விழுப்புரம்:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜேந்திரன், (வயது 60) அதே கிராமத்தில் மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி சாந்தி (55) மகன் அழகுவேல் ராஜன் (25) மற்றும் உறவினர் சகுந்தலா தேவி ஆகியோர் மதுரையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நேற்று இரவு காரில் சொந்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஞானோதயம் கிராமம் அருகில் வரும்போது எதிரே ஐதாராபாத்திலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற லாரி கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரிலிருந்த முத்துராஜேந்திரன், சாந்தி, அழகுவேல் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த சகுந்தலா தேவி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story