பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது


பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

செய்யாறு அருகே பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 43). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஓட்டி செல்லும் பஸ் காஞ்சீபுரத்தில் இருந்து பெரணமல்லூர் கிராமத்திற்கு செய்யாற்றைவென்றான் கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் செய்யாறை அடுத்த ஞானமுருகன்பூண்டி அருகில் பஸ்சை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடை ஒன்றில் பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் குமாரிடம் செய்யற்றை வென்றான் பகுதியில் பஸ் நிறுத்த சொன்னால் நிறுத்த மாட்டீர்களா என தகராறு செய்து தாக்கியுள்ளனர்.

தடுக்க வந்த டிரைவர் ராமதாசையும் தாக்கி பாக்கெட்டில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குமார் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து செய்யாற்றை வென்றான் கிராமத்தைச் சேர்ந்த ஜனா (21), அஜித் (21) மற்றும் சிவக்குமார் (19) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story