"காத்துவாக்குல ரெண்டு காதல் வந்தது மோதல்" ரோட்டில் 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை


காத்துவாக்குல ரெண்டு காதல் வந்தது மோதல்  ரோட்டில் 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
x

பின்னர் மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே அங்கு சென்று மோதலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார். மேலும் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாணவனை காதலித்து வந்த மாணவி, எப்படி நான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும் தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாமல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் உடனே இதனை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் இரு தரப்பு மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார். காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story