செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண 304 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு - தமிழக அரசு
செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண 304 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
பள்ளி, வட்டம், மாவட்ட அளவில் செஸ் போட்டிகளை அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்க்கவும், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
அதன் தொடக்க நிகழ்வாக பள்ளி அளவில் நடத்தப்படும் செஸ் போட்டிகளை தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இந்த போட்டிகள் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
ஒரு மாவட்டத்துக்கு 8 பேர் என்ற அளவில் 38 மாவட்டங்களையும் சேர்த்து 152 மாணவர்கள், 152 மாணவிகள் என மொத்தம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 304 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண சென்னை அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் நுண்ணறிவு, செயல்பாட்டு, ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை செஸ் போட்டிகளின் வழியே வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.