ஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது


ஒரு வாரத்தில் நடந்த போலீஸ் வேட்டையில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்; 15 பேர் கைது
x

சென்னையில் ஒரு வார கஞ்சா வேட்டையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதல் முறையாக பறிமுதல் ஆனது.

சென்னை

சென்னையில் தினமும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை போலீசார் சிறப்பு சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் நடந்த சிறப்பு வேட்டையில் சென்னை முழுவதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் அதிக போதை தரும் கஞ்சா பூவும் முதன் முதலாக கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.4.63 லட்சம் கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இதுவரை 792 கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,742 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இதுவரை 851 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 49 போதைப்பொருள் வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story