பஸ் தலைகுப்புற கவிழ்ந்து 34 பேர் படுகாயம்


பஸ் தலைகுப்புற கவிழ்ந்து 34 பேர் படுகாயம்
x

அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் திண்டிவனம் நோக்கி புறப்பட்டது. வீடூரை சேர்ந்த அய்யனார் (வயது 35) என்பவர் பஸ்சை ஓட்டினார். கொடிமாவை சேர்ந்த ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

ஆலகிராமம் வளைவில் பஸ் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகள் வலி தாங்க முடியாமல் கூச்சல் எழுப்பினர்.

34 பேர் படுகாயம்

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி சென்று இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் வந்த டிரைவர், கண்டக்டர் உள்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.

இவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பஸ் என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியதால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து புகையை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story