மது அருந்த பணம் தராததால் கார் கண்ணாடி உடைப்பு - 4 பேர் கைது


மது அருந்த பணம் தராததால் கார் கண்ணாடி உடைப்பு - 4 பேர் கைது
x

குளச்சல் அருகே மது அருந்த பணம் தராததால் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளச்சல்,

குமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் அருமைநாயகம். இவரது மகன் சேகர்(வயது 37). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன் (32) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். வீட்டுக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34), அஜித்ராம் (34), பிரதீப் (32), ஸ்டாலின் (31) ஆகியோர் காரை நடுவழியில் நிறுத்தி இருந்தததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த சேகர்,காரை வழிவிட்டு நிறுத்துமாறு கூறினார். அப்போது 4 பேரும் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் மது அருந்துவதற்கு சேகரிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சேகர் பணம் எதுவும் தர முடியாது என கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

கலைந்து சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து சேகரின் வீட்டிற்குள் புகுந்து கார் கண்ணாடி மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த சேகர் மற்றும் உறவினர் அஜயன் ஆகியோரை அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். உறவினர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்தனர்.


Next Story