4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது -போலீசாருக்கு டி.ஜி.பி.ரூ.1 லட்சம் வெகுமதி


4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது -போலீசாருக்கு டி.ஜி.பி.ரூ.1 லட்சம் வெகுமதி
x
தினத்தந்தி 4 May 2023 11:44 AM GMT (Updated: 4 May 2023 11:46 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராடடி ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராடடி ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.

மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் கட்டிங் எந்திரத்தை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஸ் கண்ணன் (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 6-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவரை இவ்வழக்கில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இதில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் முனைப்புடன் செயல்பட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான அரியானா மாநிலம் நூ மேவாத் மாவட்டம் பாதஸ் கிராமத்தை சேர்ந்த ஆசீப்ஜாவேத் (30) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் நேரடியாக இந்த ெகாள்ளையில் ஈடுபட்டிருந்தார்.

அவரை பிடிக்க டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் அரியானா- ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தவுரு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரவல்லி மலைப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் ஆசீப்ஜாவேத் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

அவர் ஆபத்தானவர் என்பதால் போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு அங்கு சென்றனர்.

துப்பாக்கி முனையில் ஆசீப்ஜாவேத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரை போலீசார் மேவாட் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

ரூ.1 லட்சம் வெகுமதி

இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்தையும், 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் இக்குழுவின் துணிகரமான செயலை பாராட்டி காவல் துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.



Next Story