கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி: திருவிழாக்களில் விபத்துகள் நடக்காதவகையில் விதிகள் வகுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி: திருவிழாக்களில் விபத்துகள் நடக்காதவகையில் விதிகள் வகுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

இனிவரும் காலங்களில் கோவில் திருவிழாக்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப்படவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகில் கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாலை சரியில்லாததால் தான் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாக்களில் எத்தகைய விபத்துக்கும் இடமளிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.

விபத்து நடந்த இடத்தில் மருத்துவ வசதிகளோ, அவசர ஊர்தி வசதிகளோ செய்யப்படவில்லை. திருவிழாவுக்கு அனுமதி அளித்த காவல்துறையும், அரசு நிர்வாகமும் கூட இவற்றை உறுதி செய்யவில்லை.

இனிவரும் காலங்களில் கோவில் திருவிழாக்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப்படவேண்டும். கிரேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story