மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு - தமிழக அரசு உத்தரவு


மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு - தமிழக அரசு உத்தரவு
x

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடிதம் எழுதினார். அதில், அரசு அலுவலர்களை கொண்ட துணைக்குழுவை அமைத்து, பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த மாநில வரைவுக் கொள்கையை ஒரு மாதத்திற்குள் உயர்மட்டக் குழுவுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதை அரசு பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மனிதவள மேலாண்மைத் துறை, சட்டத்துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் துணைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக துணை இயக்குநர் (பயிற்சி), உதவி இயக்குநர் (பணியமர்த்தல்), சட்ட ஆலோசகர் ஆகிய 7 பேரைக் கொண்ட துணைக்குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது. அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக துணைக்குழு கூறும் கருத்துகளை கூர்ந்தாய்வு செய்வதற்காக உயர்மட்டக் குழுவை அரசு அமைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story