கல்வராயன்மலையில்4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு


கல்வராயன்மலையில்4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

கல்வராயன்மலையில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, அருண்குமார், விக்னேஷ்வரன், சிற்றிங்கூர் ராஜா மற்றும் பாறை ஓவியர் காந்திராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொட்டிமடுவு என்ற மலை கிராம வனப்பகுதி நீரோடை அருகே உள்ள பாறைகளில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், பொதுவாக பாறையில் காணப்படும் கற்கீரல்கள், பாறையின் சுவர் அல்லது கூரைப்பகுதிகளிலே வரையப்படும். ஆனால் இங்கு தரைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டிருப்பினும், சுமார் 7 உருவங்களே காணும் நிலையில் உள்ளன. அவற்றில் திமில் உள்ள மாடு, மான், பன்றி, நாய் போன்ற விலங்குகளும், அவற்றின் அருகே கையில் வில் மற்றும் அம்புடன் மனித உருவமும், ஆயுதங்கள் இன்றி சில மனித உருவங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் ஓவியங்களில், வேட்டைச்சமூகம் மற்றும் புதிய கற்கால கால்நடை சமுகத்தின் வாழ்க்கை சூழலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இங்குள்ள கல் ஓவியங்கள், கர்நாடக பகுதியில் உள்ள குப்கல், தருமபுரி அடுத்த சிலநாயக்கனூர் வனப்பகுதியில் கிடைத்த கற்செதுக்குக்குகளுக்கும், கரிக்கையூர், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளை பெற்றாள், செத்தவரையில் உள்ள சில ஓவியங்கள் வடிவத்தில் காணப்படுகின்றது. காட்சி அமைப்பு மற்றும் உருவத்தோற்றத்தின் அடிப்படையில் இவை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். இது போன்று தமிழகத்தில் மிக அரிதாகவே காணப்படும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தடயங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது அவசியம் என்றார்.


Next Story