490 பவுன் நகை மோசடி; பெண்கள் உள்பட 3 பேர் கைது


490 பவுன் நகை மோசடி; பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:46 PM GMT)

490 பவுன் நகை மோசடி; பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

பங்கு சந்தை, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி 30 பேரிடம் 490 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அதிக லாபம் ஈட்டலாம்

தூத்துக்குடி புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மதன்குமார். இவரை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் தொடர்பு கொண்டு பேசினர்.

அவர்கள் தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்கு சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து தருவதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் செலுத்துவதாகவும் கூறி உள்ளனர்.

போலீசில் புகார்

இதை நம்பிய மதன்குமார் கடந்த 6.5.2023 அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9.5.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளார். இதில் மதன்குமாருக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளனர். கார் வாங்க எந்த முன்பணமும் செலுத்தவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மதன்குமார், கிரேனா வீட்டுக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது, கிரேனா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மோசடியாக ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்குமார், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தார்.

3 பேர் கைது

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர்.

490 பவுன் மோசடி

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதாவது, கைது செய்யப்பட்ட 3 பேரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 30 பேரிடம், நிதி நிறுவனம், பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி 490 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 பேரிடம் 490 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story