சொகுசு காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது

சூலூரில் சொகுசு காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி
கோவையை அடுத்த சூலூர், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, மற்றும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று சூலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணபத்ராம் (வயது 25), தினேஷ் (20), ஹேமத்தராம் (32) மற்றும் கருமத்தம்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (22), கலங்கல் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (47) ஆகிய 5 பேர் என்பதும் காரில் குட்காவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 502 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






