திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் வேவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

கஞ்சா விற்பனை

திருவள்ளூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த பெரியகுப்பம் முருகப்பன் நகரை சேர்ந்த பரத் (வயது 22) மற்றும் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஆசிரியர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருவள்ளூர் அடுத்த பாக்குப்பேட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த பாக்குப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் (23) என்பவரை மணவாளநகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில்

இதைபோல கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் நேற்று பஸ்சுக்காக பையுடன் காத்திருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை மடக்கி பிடித்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் ஊத்துக்கோட்டை அடுத்த பெத்தநாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த சதிஷ் (24) என்பதும் தெரிய வந்தது இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதிஷ்சை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும்தப்பியோட முயற்சித்தார்.

அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் 350 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ககுரு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது. திருத்தணி போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story