வாலிபர் கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் 5 பேர் சரண்


வாலிபர் கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் 5 பேர் சரண்
x

நெல்லையில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வாலிபர் கொலை

பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் பார்வதிநாதன் (வயது 22). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆதிபராசக்திநகரில் உள்ள டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் பார்வதிநாதனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனை எடுத்து வைத்தது தொடர்பாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்வதிநாதனின் நண்பர்களே அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்திலும், வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

5 பேர் சரண்

இந்த நிலையில் நெல்லை மாவட்ட 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி விஜயகுமார் முன்னிலையில், மேட்டுக்குடியை சேர்ந்த இட்லிமணி என்ற இசக்கிமுத்து, தூத்துக்குடி வசவப்பபுரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி, மதன், மேட்டுக்குடியை சேர்ந்த முருகன், மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த சின்னதுரை ஆகிய 5 பேர் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story