மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

வையம்பட்டி:

5 பவுன் சங்கிலி பறிப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள புதுவாடிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி(வயது 60). இவர் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் நேற்று கீரனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லையான கீரனூர் அருகே உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகில் நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். மேலும் கருப்பாயியை கீழே தள்ளிவிட்டு ஓடிய அந்த வாலிபர், மறுபக்க சாலையில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்ற மற்றொருவருடன் சேர்ந்து தப்பிச்சென்றார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கருப்பாயியிடம் மர்ம நபர் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. போலீஸ் சோதனைச்சாவடி அருகே நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story