5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை


5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:45 PM GMT)

தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளதுடன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

கடல் சீற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், வாலிநோக்கம், ஏர்வாடி, கீழக்கரை என மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 5-வது நாளாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி என மாவட்டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகுகளும் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீன்கள் தட்டுப்பாடு

கடந்த 4 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் என மாவட்டம் முழுவதும் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள கடல் பகுதிகளில் சிறிய வத்தைகளிலும், தூண்டில் மூலம் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய விளை, பாறை, முரல், நகரை உள்ளிட்ட மீன்களின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. 4 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்கெட்களில் மீன்களின் விலை உயர்ந்துள்ளதுடன் மீன்களுக்கு தட்டுப்பாடாகவே உள்ளது.


Next Story