தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்


தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
x

தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

செங்கல்பட்டு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் கடந்த 2-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டிருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பதை 500 கன அடியாக அதிகரிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

அதன் பேரில் நேற்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்து திறக்கப்படது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.3 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 862 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 400 கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் உள்ளது. எரியில் நீர் நிரம்பினால் தேவைக்கு ஏற்ப மதகுகளில் இருந்து உபரி நீர் திறந்து விடுவது வழக்கம் குறிப்பாக உபரி நீர் திறக்க வேண்டும் என்றால் முதலில் ஐந்து கண் மதகில் உள்ள ஷட்டர்களின் வழியாக தான் உபரி நீர் திறப்பது வழக்கம் இதற்காக ஆண்டுதோறும் செம்பரம்பாக்கம் ஏரியின் ஷட்டர்கள், அதனை இயக்கக்கூடிய மின் மோட்டார்கள் போன்றவற்றை பராமரிப்பது வழக்கம்.

தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஷட்டர்களை மின் மோட்டார்கள் மற்றும் கைகளால் திறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கும்போது மின்மோட்டார் செயல்படாததால் மற்றொரு ஷட்டர் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று கூடுதலாக நீர் திறக்கும் நேரத்திலும் ஷட்டரில் உள்ள மின்மோட்டார் செயல்படாததால் மற்றொரு ஷட்டர் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. முக்கியமாக அதிக அளவில் உபரி நீர் திறக்கும் நேரத்தில் மின் மோட்டார்கள் இதுபோல் பழுதடைந்தால் பெரும் விபத்து நேரிட வாய்ப்பு இருப்பதாகவும் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள், ஷட்டர்கள் மின் மோட்டார்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story