பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை


பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை
x

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று(பிப்.3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

"எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story