இலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடி வருகை


இலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடி வருகை
x

இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகுமூலம் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்த விலைவாசி உயர்வால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் பலர் வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகளில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றனர். அவர்களை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடி 5-வது மணல் திட்டு பகுதியில் சிலர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து கடற்படை வீரர்கள் அங்கு சென்று விசாரித்த போது அவர்கள் இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார்(வயது49), அவரது மனைவி ரோஜா (38), மகள் விதுஷா(12), மகன்கள் தனுஷன்(10), கிருஷ்ணா(7) மற்றும் நியூட்டன் நிமாலராஜன்(47) என்பது தெரியவந்தது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து நேற்று இரவு படகில் அழைத்து வந்தவர்கள், இன்று அதிகாலை தனுஷ்கோடி பகுதியில் இறக்கி விட்டு சென்றிருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கடற்படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு அவர்களை தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களை தவிர மற்ற 3 பேரிடமும் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 125-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story