6 பேர் மாயம் என்ற செய்தி முற்றிலும் தவறானது - ஈஷா யோகா மையம் விளக்கம்


6 பேர் மாயம் என்ற செய்தி முற்றிலும் தவறானது - ஈஷா யோகா மையம் விளக்கம்
x

கோப்புப்படம் 

ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.

சென்னை,

தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை என்பவர், காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக்கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என்று கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மையத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஓராண்டு காலமாகியும் மந்தமான விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு, நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல், "கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போய் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்திலிருந்து 6 பேர் மாயம் என்று பகிரப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது என்று ஈஷா யோகா மையம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஈஷா யோக மையத்தில் இருந்து 6 பேர் மாயம் என்று பகிரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story