பள்ளிக்கரணையில் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை


பள்ளிக்கரணையில் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
x

பள்ளிக்கரணையில் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி வீட்டில் 60 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சென்னை

பள்ளிக்கரணை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை டில்லிபாபு நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 45). இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடந்தை பெருமாள் கோவிலுக்கு சென்றுவிட்டார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த சுமார் 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பிரவீன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சென்று கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story