ஜல்லிக்கட்டில் 641 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஜல்லிக்கட்டில் 641 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

ஜல்லிக்கட்டில் 641 காளைகள் சீறிப்பாய்ந்தன.

அரியலூர்

கீழப்பழுவூர்,

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஊரின் வடக்கு பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா தொடங்கி வைத்தார்.

இதில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் முன்பே உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க தயாராகினர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

பரிசுகள்

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன. சில காளைகள் வீரர்களை பந்தாடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குக்கர், சைக்கிள், தங்க காசு, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

சில காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளையை பிடித்தால் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட காளைகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து வழங்கப்பட்ட பரிசு மட்டுமின்றி, மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளும் வழங்கப்பட்டது.

29 பேர் காயம்

முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் மொத்தம் 641 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் மொத்தம் 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் இளவரசனுக்கு(35) முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். காலை 8.30 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டையொட்டி கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.


Next Story