680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2023 7:00 PM GMT (Updated: 21 May 2023 7:00 PM GMT)

திருச்செந்தூர் அருகே 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில் மொத்தம் 680 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக காரை ஓட்டி வந்த தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த டவீன் செல்வராஜ் (வயது 40), கருங்கடல் செம்மண்குடியிருப்பை சேர்ந்த பாலாசிங் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 680 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் எட்டயபுரம் கீழவாசல் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story