அனுமதி இன்றி வைத்திருந்த ரூ.7½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


அனுமதி இன்றி வைத்திருந்த ரூ.7½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
x

திருமானூரில் அனுமதி இன்றி வைத்திருந்த ரூ.7½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர்

சோதனை

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், அனுமதிக்கப்படாத இடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத இடங்களில் வெடிபொருட்களை வைப்பது உள்ளிட்டவை குறித்து சோதனை செய்து வருகின்றனர்.

வெடிகள் பறிமுதல்

அதன்படி நேற்று திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் திருமானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமானூர் அருகே ராஜேஷ்குமார் என்பவர் அனுமதி பெறாத இடத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவகாசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story