வெறி நாய் கடித்து 7 பேர் படுகாயம்


வெறி நாய் கடித்து 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெறி நாய்

திருவாடானையில் கடந்த சில தினங்களாக வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது. இந்த வெறிநாய் திடீரென சந்தைக்கு வந்தவர்களை துரத்தி, துரத்தி கடித்துள்ளது. பின்னர் அதே நாய் மங்கலக்குடி அருகே உள்ள குஞ்சங்குளம் பகுதியில் சிலரை கடித்தது. மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடு, மாடுகளையும் கடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் ஆரோக்கியதாஸ், கருத்த பாண்டி, புஷ்பம், வெளியங்குடி ரெத்தினம் மனைவி பூரணம், கம்பெனி கரையக்கோட்டை சீனிவாசன், சூச்சனி ராமு, கீழக் கைக்குடி ஆசைத்தம்பி ஆகியோரையும் வெறிநாய் துரத்தி, துரத்தி கடித்தது.

அப்புறப்படுத்த கோரிக்கை

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் திருவாடானை அரசு ஆஸ்பத்தி்ரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், திருவாடானை பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று நாய்கள் கடித்து பலர் காயமடைந்து வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதில் சில வெறி பிடித்த நாய்கள் மனிதர்களை கடிப்பதோடு ஆடு, மாடுகளையும் கடித்து விடுகின்றன. எனவே இப்பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story