7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு; 3 பேர் கைது


7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:47 PM GMT)

ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி பெண் பணியாளரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாலி சங்கிலி பறிப்பு

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார் கோவில் பாப்பனேந்தல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ரமேஷ் குமாரி (வயது 40). இவர் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ரமேஷ்குமாரி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

ஆர்.காவனூர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரமேஷ் குமாரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரமேஷ் குமாரி படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

தனிப்படை

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வைரமணி (21), சிவகங்கை சோழபுரம் கிழக்குத்தெரு அருள் வின்சென்ட் (43) என தெரியவந்தது. அதில் அருள்வின்சென்ட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் சங்கிலியை கல்லல் கூமாச்சிபட்டியை சேர்ந்த நெடுஞ்செழியனிடம் கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளனர். அதை அவர் பட்டமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்த வடிவேலுவிடம்(43) கொடுத்து பணம் பெற்று கமிசனை எடுத்து கொண்டு கொடுத்ததாக தெரியவந்தது.

பறிமுதல்

அதன்அடிப்படையில் நெடுஞ்செழியன், வடிவேல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் தாலி சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

வைரமணியை போலீசார் தேடிவருகின்றனர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதோடு மதுரையில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.


Next Story