தையல்காரர் வீட்டில் 7 பவுன் நகை கொள்ளை


தையல்காரர் வீட்டில் 7 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 12 Aug 2023 6:45 PM GMT (Updated: 12 Aug 2023 6:46 PM GMT)

கச்சிராயப்பாளையத்தில் தையல்காரர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து 7 பவுன் நகையை கொள்ளையடித்த தொழிலாளி சிக்கினார்

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 50) தையல்காரர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று விஸ்வநாதன் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்மநபர், விஸ்வநாதன் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றார்.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வெளியூர் சென்ற விஸ்வநாதன் வீடு திரும்பினார். பின்னர் அவர் வீட்டு கதவை மற்றொரு சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 7 பவுன் நகை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கைது

இது குறித்த தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நகையை கொள்ளையடித்தது தோப்பூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான நாகராஜன் (40) என்பது தெரியவந்தது இதையடுத்து நாகராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story