பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு


பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு
x

கனமழை காரணமாக நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

திருவள்ளூர்

நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

அதன்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 1,165 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக 670 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னை பெரு மாநகராட்சி மக்களுக்காக 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வெளியேற்றம்

புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 2,794 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக நீர்வரத்து 756 கன அடி‌ நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை பெருமாநகராட்சி மக்களுக்காக 710 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கனஅடியில், நேற்று நிலவரப்படி 351 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 211 கன‌ அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

7,538 மி.கனஅடி நீர் இருப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போதைய நிலவரப்படி 2,728 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 2,187 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 1,180 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை பெருமாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு பெய்த மழையின் காரணமாக மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 7,538 மில்லியன் கன அடி(7.5. டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story