பலத்த மழையால் 775 கனஅடி நீர் வரத்து: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு


பலத்த மழையால் 775 கனஅடி நீர் வரத்து: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
x

பலத்த மழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஏற்கனவே பூண்டி ஏரியில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 23.60 அடியை தொட்டு உள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 250 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் இரவும் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 775 கன அடியாக அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை முதல் மேலும் 250 கனஅடி வீதம் உபரிநீர் ெவளியேற்றப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

கோடை காலத்தில் உபரிநீரை திறந்து விடும் அளவுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 2015-ம் ஆண்டு கடும் வெள்ள பாதிப்பின்போது கூட செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 23.50 அடியில்தான் இருந்தது. அதன் பிறகு தற்போது கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 23.60 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். அதில் தற்போது 3,540 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் உள்ளது.


Next Story