3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி


3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி நலத்திட்ட உதவி
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,152 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

திருப்பத்தூர்

நலத்திட்ட உதவி

ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் எம்.கே.ஆர். சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 3,152 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு நன்றி கூறினார்.

ரேஷன் கடை திறப்பு

திருப்பத்தூர் அபாய் தெரு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார். திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி, பொது மக்களுக்கு சர்க்கரை, அரிசி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் தர்மேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர் சுதாகர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story