மதுரவாயலில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மதுரவாயலில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தம்பியை அடித்ததால் தாய் தன்னை அடிப்பார்களோ என்று பயந்து 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 37). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா (32). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சர்மி (12) என்ற மகளும், கமலேஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.

சர்மி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், அதே பள்ளியில் அவருடைய தம்பி கமலேஷ் 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த சர்மி, தனது தந்தைக்கு போன் செய்து, "தம்பி சரியாக படிக்கவில்லை. அவனை நான் அடித்து விட்டேன்" என்று கூறினார்.

வேலை முடிந்து இரவு முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மகள் சர்மி புடவையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சர்மியை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சர்மி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் சர்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

சர்மி தனது தம்பி சரியாக படிக்கவில்லை என்று அவனை அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story