சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.9 ஆயிரம்


சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.9 ஆயிரம்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:45 PM GMT)

தியாதுருகத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.9 ஆயிரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

திருவண்ணாமலை அருகே சோ.கீழ்நாச்ச நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 50). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். முருகன் நேற்று திருவண்ணாமலையில் இருந்து ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தியாகதுருகம் அருகே திம்மலையில் உள்ள தனியார் பள்ளியில் இறக்கிவிட்டு மீண்டும் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் மின் வாரிய அலுவலகம் அருகே வந்தபோது சாலையில் பை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்ததை பார்த்தார். பின்னர் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையில் கிடந்த பையை எடுத்து அதை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

உடனே போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ரூ.9,500 ரொக்கம் மற்றும் ஆதார் காா்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவை இருந்தன. ஆதார் கார்டில் இருந்த முகவரியை பார்த்தபோது அது ரிஷிவந்தியம் அருகே பாவந்தூர் தக்கா கிராமத்தை சேர்ந்த சபியுல்லா மகன் தமீஸ்தீன்(29) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. உடனே அவரை போலீசார் தொடர்புகொண்டு கேட்டபோது தனது பணப்பை தொலைந்து போனதையும், அதில் இருந்த ஆவணங்களையும் தெரிவித்தார். இதையடுத்து தமீஸ்தீனை நேரில் வரவழைத்து அவரிடம் பணப்பையை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஒப்படைத்தார். பின்னர் சாலையில் கேட்பாரற்று கிடந்த பணப்பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முருகனின் நேர்மையை போலீசாரும், அந்த பகுதி மக்களும் வெகுவாக பாராட்டினர்.


Next Story