அஜித்தின் துணிவு படத்தின் 900 டிக்கெட்டுகள் கொள்ளை -வேலூரில் பரபரப்பு


அஜித்தின் துணிவு படத்தின் 900 டிக்கெட்டுகள் கொள்ளை -வேலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 11:17 AM GMT (Updated: 10 Jan 2023 11:21 AM GMT)

நற்பணி இயக்க அலுவலகத்தில் அஜித்தின் துணிவு படத்தின் 900 டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் காகிதப்பட்டறையில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகம் இயங்கிவருகிறது. இதன் தலைவராக சுரேஷ்குமார் என்பவரும், செயலாளராக சண்முகம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர், இந்நிலையில், நற்பணி இயக்க அலுவலகத்தில் 'துணிவு' படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட் கடந்த 2 நாட்களுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு சுரேஷ்குமார் அலுவலகத்தை பூட்டிச்சென்றார். மறுநாள் இன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு காலையில் வந்து பார்த்தபோது அலுவலக ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

நள்ளிரவில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அலுவலக மேசையில் இருந்த 'துணிவு' படத்தின் 900 டிக்கெட்களையும் லாக்கரில் இருந்த 16,ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அஜித் தலைமை நற்பணி மன்றம் தலைவர் சுரேஷ்குமார் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி தேடி வருகிறனர்.

நாளை அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் திருடுபோன சம்பவம் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story