குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை பலி


குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே குட்டையில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் இளம்வழுதி. இவரது மகன் ரக்சன் (வயது 2 ). இவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புற பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் வெகு நேரமாகியும் அவனை காணாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகில் உள்ள குட்டையில் தேடிப் பார்த்தனர்.

அப்போது அங்கே ரக்சன் நீரில் மூழ்கி இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள், இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story