54 வயது கூலி தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 24 வயது பட்டதாரி பெண்..!


54 வயது கூலி தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 24 வயது பட்டதாரி பெண்..!
x

பட்டதாரி பெண் விமலா விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

சேலம்,

இரு மனங்கள் இணையும் இல்லற வாழ்க்கையில் மன பொருத்தத்தை விட வயது பொருத்தத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மணமகனைவிட மணமகளின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு விதிவிலக்காக அதிக வயது வித்தியாசத்துடன் திருமண வாழ்க்கையில் இணைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தால் அந்த ஜோடியை சமூகம் வித்தியாசமான கண்ணோட்டத்துடனே பார்க்கும் நிலை இருக்கிறது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் 24 வயது பட்டதாரி பெண்ணை கரம் கரம்பிடித்த 54 வயது தொழிலாளி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் வயது 54. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் விமலா, வயது 24, என்பவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு திருவண்ணாமலைக்கு சென்று, அங்கு வைத்து பட்டதாரி பெண் விமலாவிற்கு விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்திச் சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், தந்தையின் புகாரை அடுத்து, போலீசார் இருவரையும் தேடி வந்துள்ளனர்.

இத்தகவல் அறிந்த விமலா கிருஷ்ணன் தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் அங்கு விமலாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தங்களுடன் திரும்பி வர கட்டாயப்படுத்தி நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் மேஜர் என்பதாலும் இளம்பெண் விமலா தனது காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் கூறியதாலும் அவரது விருப்பப்படி கணவர் கிருஷ்ணனுடன் விமலாவை காவல்துறையினரும் அனுப்பி வைத்தனர்.


Next Story