கட்டிடத்தின் மாடியில் இருந்து முறிந்து விழுந்த செல்போன் கோபுரம்


கட்டிடத்தின் மாடியில் இருந்து முறிந்து விழுந்த செல்போன் கோபுரம்
x

பலத்த காற்று காரணமாக கட்டிடத்தின் மாடியில் இருந்து முறிந்து விழுந்த செல்போன் கோபுரம் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

பலத்த காற்று

கரூரில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூரில் நேற்று முன்தினம் காலை முதலே பலத்த காற்று வீசி வந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அதன் மொட்டை மாடியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் 100 அடி கொண்ட இந்த செல்போன் கோபுரம் திடீரென மாடியில் இருந்துமுறிந்து விழுந்தது. 3-வது மாடியில் இருந்து சாய்ந்த அந்த செல்போன் கோபுரம் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் மின் கம்பம் உடைந்தது.

மின்சாரம் துண்டிப்பு

இதனையடுத்து அப்பகுதியிலிருந்து சக்தி நகர், இந்திரா நகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்தை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பங்களை மாற்றி, மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். செல்போன் கோபுரமும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் அப்பகுதி வழியாக பொதுமக்கள் எவரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


Next Story