மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த தென்னை மரம்

மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த லிங்கனூர் - வீரகேரளம் செல்லும் சாலையில் வீரகேரளம் நகர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ரோட்டோரத்தில் இருந்த தென்னை மரம் வேரோடு முறிந்து மின்சார வயர்களின் மேல் விழுந்தது.
இதனால் திடீரென்று அந்த தென்னை மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறை மற்றும் மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு மின்சார வயரில் கிடந்த தென்னை மரத்தை அப்புறப்படுத்தினர். மேலும் தென்னை மரம் விழுந்ததால் சேதம் அடைந்த 2 மின்கம்பம் மற்றும் மின்சார வயர்களை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.






