இருதரப்பினர் இடையே தகராறு; பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


இருதரப்பினர் இடையே தகராறு; பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

அரிவாள் வெட்டு

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 54). இவரது மனைவி விஜயா (49). அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (50). இவரது மனைவி ராதிகா (45). கூலி தொழிலாளர்களான இவர்களது இரு குடும்பத்தினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் சிவசுப்பிரமணியத்திற்கும், விஜயாவுக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் விஜயாவை வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சிவசுப்பிரமணியனின் மனைவி ராதிகா, அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகியோர் சேர்ந்து விஜயாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

7 பேர் மீது வழக்கு

இதில் படுகாயம் அடைந்த விஜயாவை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் சிவசுப்பிரமணியன், அவரது மனைவி ராதிகா, தமிழ்ச்செல்வி ஆகிேயார் மீது வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்தார். அதேபோல் ராதிகா அளித்துள்ள புகாரில் வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அம்மிக்கல்லை தனது வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலைமுடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story