ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும்


ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும்
x

மயிலாடுதுறையில் ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை நகரில் உள்ள வரதாச்சாரியார் பூங்காவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை வைப்பதற்காக பீடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டார். இதை தொடர்ந்து தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார்.

பேட்டி

முன்னதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பெண் விடுதலைக்காக போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலை மற்றும் அரங்கம் ஆகியவை மயிலாடுதுறையில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக மாயூரம் வேதநாயகம் பிள்ளை அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என நூலகம் அமைத்திட இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சிறப்பு பழுதுபார்க்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், செய்தித்துறை கூடுதல் இயக்குனர் சரவணன், உதவி கலெக்டர் யுரேகா, நகர சபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story