ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்


ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம்
x

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகப்படும் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கு

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்தனர்.

மருத்துவ பரிசோதனை

இதற்கு அனுமதி கேட்டு திருச்சி ஜே.எம்.-6 கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது 13 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அதில் தென்கோவன் என்ற சண்முகம் தவிர மற்ற 12 பேர் தங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ அறிக்கையை 21-ந்தேதி (நேற்று) கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு சிவகுமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சாமி ரவி, திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேருக்கும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் கடந்த 18-ந்தேதி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் 19-ந்தேதி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 12 பேரின் மருத்துவ அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மூடிமுத்திரையிட்ட கடிதம் மூலம் கோர்ட்டுக்கு அனுப்பிவைத்தது.

உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி

இந்த நிலையில் நேற்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாலையில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் சந்தேகப்படும் 13 பேரில் சத்யராஜ், சுரேந்தர் தவிர 11 பேர் மாஜிஸ்திரேட்டு முன் நேரில் ஆஜர் ஆனார்கள். அப்போது, தென்கோவன் என்ற சண்முகம் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற 12 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் கேட்ட போது, 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உரிய அனுமதி பெற்று அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும். யாருக்கு எங்கு எப்போது அந்த சோதனை நடத்தப்படும் என்று அனுமதி வந்த பிறகு தான் தெரியும் என்றனர்.


Related Tags :
Next Story