ஜமாபந்தியில் ஏர் கலப்பையுடன் மனு அளிக்க வந்த விவசாயி


ஜமாபந்தியில் ஏர் கலப்பையுடன் மனு அளிக்க வந்த விவசாயி
x

திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அரை நிர்வாணத்தில் கையில் ஏர் கலப்பையுடன் விவசாயி வந்து மனு அளித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெரும்பூர் அடுத்த மேற்கண்டை கிராமத்தில் உள்ளது. இவருக்கு சொந்தமான பம்பு செட்டில் இருந்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இவரை கேட்காமல் பொது கிணற்றில் இருந்து நீரேற்ற மின் இணைப்பு எடுத்து சென்றதால் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு அவருடைய பம்ப் செட் முற்றிலும் எரிந்துள்ளது. தன்னிடம் அனுமதி பெறாமல் ஏன் பம்பு செட்டில் இருந்து மின் இணைப்பு கொடுத்தீர்கள் என்று மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து வேலாயுதம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார் அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்திலும் மனு அளித்துள்ளார். இதுவரை மின் வாரிய ஊழியர்கள் மீதும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அரை நிர்வாணத்தில் கையில் ஏர் கலப்பையுடன் அவர் வந்து மனு அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story