அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை


அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை
x

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்,

இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் கொடுத்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவரது பெற்றோர் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க சென்று விட்டனர். அவருடைய சகோதரர் கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது.

கல்லூரியில் இருந்து இரவு வீட்டுக்கு வந்த அவரது சகோதரர் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே புடவையால் மின் விசிறியில் ஜெயந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், தூக்கில் தொங்கிய ஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது, ஜெயந்தி கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், "தனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலமாக நிலம் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கி தவணை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

எனவே அந்த கடன் தொல்லையால் ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story