சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து


சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து
x

சோழிங்கநல்லூர் அருகே சிலிண்டர் வெடித்து பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர்

சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர்-தாழம்பூர் பிரதான சாலையில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் பழைய வயர்களில் இருந்து உள்ளே இருக்கும் செம்புகளை கட்டிங் எந்திரம் மூலம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிங் எந்திரத்தில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகே இருந்த சிலிண்டர் மீது பட்டு திடீரென தீ பற்றியுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது.

தீ விபத்து குறித்து கடை ஊழியர்கள் சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கும் தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 15 அடிக்கு மேல் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாலும் கரும்புகை வெளியேறியதாலும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமமாக இருந்தது. மேலும் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் அந்த சாலை வழியாக சென்ற தண்ணீர் டேங்க் லாரியை நிறுத்தி தண்ணீரை எடுத்து தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. எனவே அந்த பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கண்ணெரிச்சலால் பெரும் அவதிக்குள்ளாகினர்.


Next Story