சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் துணிகரம்


சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் துணிகரம்
x

பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியை கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் பறித்து தப்பி சென்றனர்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஏழுமலையான் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ரதிகுமாரி (வயது 54). இவர் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ரதிகுமாரி தனது மகளுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நடந்து சென்றார். பின்னர் இரவு அங்கிருந்து நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு ரதிகுமாரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்து கொண்டு தப்பி சென்றனர். நிலைதடுமாறிய ஆசிரியை சாலையில் விழுந்து காயமடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகே இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் நகை பறிப்பு குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியையிடம் நகையை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story