பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு


பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
x

பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

கரூர்

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து க.பரமத்தி வழியாக கோவைக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் கரூரில் இருந்து க.பரமத்தி செல்வதற்காக சில பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது பஸ்சின் கண்டக்டர் க.பரமத்தியில் பஸ் நிற்காது என்று கூறி அவர்களை ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணிகள் க.பரமத்தியில் உள்ள உறவினர்களிடம் போன் செய்து நடந்த விவரத்தை கூறினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் அந்த பஸ் க.பரமத்திக்கு வந்தது. அப்போது அங்கு நின்ற 10-க்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சை சிறைபிடித்து, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இனி வரும் காலங்களில் அனைத்து பஸ்களும் க.பரமத்தியில் நிற்கும், இதுபோல் கரூர் பஸ் நிலையத்தில் ஏறும் அனைத்து பயணிகளையும் ஏற்றிக் கொள்வார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிறைபிடிப்பு கைவிடப்பட்டது. இதையடுத்து பஸ் அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story