சின்ன தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு


சின்ன தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
x
சேலம்

மேச்சேரி:-

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசிமக திருவிழா சின்ன தேரோட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று பெரிய தேரோட்டம் நடக்கிறது.

பத்ரகாளியம்மன் கோவில்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமக தேர்திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான சின்னதேரோட்டம் மற்றும் விநாயகர் தேர் வீதி உலா நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. முன்னதாக விநாயகர் தேர் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் தேரில் எழுந்தருளினார்.

திரளானவர்கள் பங்கேற்பு

பின்னர் அம்மன் சின்ன தேர் அலங்கரிக்கப்பட்டு அதில் பத்ரகாளியம்மன் எழுந்தருளினார். பின்னர் விநாயகர் தேர் முன்செல்ல பின்னால் அம்மன் தேர் வீதி உலா சென்றது. தேரோட்டத்தை சதாசிவம் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

2 தேர்களும் கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக கோவிலை இரவு 7 மணி அளவில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரிய தேரோட்டம்

இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் பெரிய தேரோட்டம் நடக்கிறது. அப்போது விநாயகர் தேரும், பெரிய தேரும் அலங்கரிக்கப்பட்டு பெரிய தேரில் பத்ரகாளியம்மன் எழுந்தருளுகிறார். 2 தேர்களும் கோவிலில் இருந்து புறப்பட்டு மேற்கு ரத வீதி வழியாக கிராம சாவடி அருகில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் கூட்டத்தாருடன் விநாயகர் தேர், பெரிய தேர் கோவிலை வந்தடைகிறது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) சத்தாபரணம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பத்ரகாளியம்மன் பொங்க பாலியில் இருந்து வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. 10-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story