சின்னமனூரில் கார் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி வாலிபர் பலி


சின்னமனூரில் கார் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2023 9:30 PM GMT (Updated: 21 Oct 2023 9:31 PM GMT)

சின்னமனூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் பலியானார். அவரது தாய் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

சின்னமனூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் பலியானார். அவரது தாய் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூணாறுக்கு சுற்றுலா

சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நிஷா (வயது 40). இவர்களுக்கு அரவிந்தன் (20), ஜெயசுதன் (12) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில், நிஷா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் தர்மபுரியை சேர்ந்த சிவநாதன் (40) என்பவர் பேராசிரியராக உள்ளார்.

இந்தநிலையில் நிஷா தனது மகன்களுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் ஒரு காரில் சென்னையில் இருந்து மூணாறு நோக்கி புறப்பட்டனர். அவர்களுடன் சிவநாதனும் வந்தார். சென்னையில் இருந்து தேனி வழியாக அவர்கள் மூணாறு செல்ல திட்டமிட்டு வந்தனர். காரை அரவிந்தன் ஓட்டினார்.

உடல் நசுங்கி பலி

நேற்று காலை தேனி மாவட்டம் சின்னமனூரில், துர்க்கை அம்மன் கோவில் அருகில் அவர்கள் வந்தனர். அப்போது எதிரே லாரி ஒன்று வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் இடிபாடுகளில் சிக்கிய அரவிந்தன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். நிஷா, அவரது இளைய மகன் ஜெயசுதன், சிவநாதன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன்பக்கமும் சேதமடைந்தது.

இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story