ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா - ஆடுகளை பலியிட்டு கறி விருந்து


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா - ஆடுகளை பலியிட்டு கறி விருந்து
x

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழாவில் ஆடுகளை பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து தடபுடலாக நடந்தது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி, கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடந்து வருகிறது.

இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

இந்த திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக்கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவிலில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா நேற்று காலை நடந்தது. இதற்காக நேர்த்திக்கடனாக விடப்பட்டு இருந்த 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது.

மேலும் 85 மூடை அரிசி சாதம் தயாரானதும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறியையும் பக்தர்கள் சாப்பிட்டனர்.

கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன.


Next Story