திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வாகனங்களை திருடி விற்ற பலே ஆசாமி கைது


திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வாகனங்களை திருடி விற்ற பலே ஆசாமி கைது
x

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 16 இருசக்கர வாகனங்களை திருடி கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்ற பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 16 இருசக்கர வாகனங்களை திருடி கிராமங்களில் குறைந்த விலைக்கு விற்ற பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்த பூவகிழவன்பட்டியை சேர்ந்தவர் ராசு. விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய உறவினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை பார்க்க ராசு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். மருத்துவமனை வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ திருடி விட்டனர்.

அதேபோல் திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்தவர் சின்னு. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இருசக்கர வாகன நிறுத்துமிட காவலாளியாக இருக்கிறார். அங்கு நிறுத்தி இருந்த அவருடைய மொபட்டை யாரோ திருடி விட்டனர்.

மேலும் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த மெக்கானிக் பாலசுப்பிரமணி. இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வருவதற்குள் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

கைது

இது தொடர்பாக 3 பேரும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அடுத்தடுத்து 3 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால், திருடனை பிடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதையடுத்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, ஏட்டுகள் ஜார்ஜ், ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் வாகன திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆத்தூர் அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த ஜெயராம் (வயது 52) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பல்வேறு இடங்களில் திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்கள் என 16 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2-வது முறையாக சிக்கினார்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜெயராம் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார். அவ்வாறு திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்களை நகரங்களில் விற்றால் எளிதில் கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது.

இதனால் திருட்டு வாகனங்களை கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், பால் மற்றும் பூ வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று இருக்கிறார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது 2-வது முறையாக சிக்கி இருக்கிறார் என்று கூறினர்.


Next Story